வியாழன், 30 ஜூன், 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை: - 2





நூல்: வாங்க அறிவியல் பேசலாம்
ஆசிரியர்: இரா. நடராசன்
வெளியீடு: Books for Children
பக்கங்கள்: 112        விலை: ரூ. 80/-

பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்தும், (1996-ல் அது உசத்தி) +1-ல் Commerce Group-ல் நான் சேர்ந்ததற்குக் காரணமே, எனக்கு அறிவியல் பாடம் பிடிக்காது என்பதால்தான். அப்படிப் பிடிக்காமல் போனதற்கு ஒரு ஆசிரியர்தான் காரணம் என்றாலும், அதற்குப் பின்னும் சுமார் 15 ஆண்டுகளுக்கு, (சுஜாதாவின் நூல்கள் தவிர) எனக்கும் அறிவியல் குறித்த புத்தகங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போனது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான், ஸ்டீபன் ஹாகிங்ஸ், பில் பிரைசன் போன்றோரின் சில நூல்களைப் படித்து வருகிறேன்.

     அறிவியல் உட்பட, கல்வி குறித்து எழுதுபவர்களில் நான் மதிக்கும் சிலரில் முக்கியமானவர் ‘ஆயிஷா’ இரா. நடராசன். அவர் மொழியாக்கம் செய்து, தொகுத்திருக்கும் நூல்தான் ‘வாங்க அறிவியல் பேசலாம்’. உலகப் புகழ் பெற்ற 15 அறிவியலாளர்களின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு காலங்களில், பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவர்களின் நேர்காணல்களைத் தேடித் தொகுத்திருப்பதற்காகவே நிச்சயம் பாராட்டலாம். சாமானியர்களும் அறிந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி. ராமன் போன்றவர்கள் முதல், அறிவியலைக் கவனிப்போர் மட்டுமே அறிந்த கார்ல் சாகன், ரிச்சர்ட் டாக்கின்ஸ் வரை, சிறந்த அறிவியல் ஆளுமைகளின் சாதனைகள் மற்றும் கருத்துகளை அனைவரும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

        அறிவியல் மட்டுமல்லாது, சமகால அரசியல் மற்றும் சமூகவியலைப் புரிந்துகொள்ளவும் இப்புத்தகம் பயன்படும். அறிவியல் ஆள்பவர்களுக்கானது அல்ல; அது மக்களுக்கானது என்ற கருத்து, நூல் முழுவதும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட அறிவியலாளர்களின் பொதுநலனும், தியாகமும், விடாமுயற்சியும், தங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த அறிவியலாளர்கள் மீது கொண்டுள்ள மதிப்பும் அனைவரும் போற்றவும், பின்பற்றவும் வேண்டியவை.
     புத்தகத்தில், என்னைத் தாக்கிய, எண்ணங்களைத் தூக்கிய ஏராளமான வரிகளில், சிலவற்றை இங்கே தருகிறேன்.
-- “சந்தைத் தலையீடுகள், இன்று வெற்றி என்பதைக் கருத்தாக்கத்தின் புதிய சிந்தனைப் பதிவாகப் பார்க்காமல், அதிக விற்பனைத் தன்மையாகப் பார்க்கும் அவலம், அறிவியல் சிந்தனைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.” – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.
-- “நாங்கள் எங்கள் Web-க்கு (www) கட்டணம் வசூலிக்காதது மட்டுமல்ல, கண்டுபிடிப்பு உரிமமோ, உரிமை வசூலோ (Royalties) இன்று வரை ஒரு டாலர் கூட பெற்றது இல்லை. பொது சேவை – அதுவே எனது குறிக்கோள். ஆகஸ்ட் 6 என்பது ஹிரோஷிமாவை நினைவுபடுத்தும் பேரழிவு நாள். அதே நாளில் இணையத்தை, உலகை ஒன்றிணைக்கும் முயற்சியாக வெளிப்படுத்த நான் விரும்பினேன்.” – டிம் பெர்னர் லீ.
-- “ஒருவர் பெரிய ஆளாக வாழ்கிறாரா என்பதை விட, தன் சுய விருப்பப்படி பாசாங்கற்ற மனிதராக வாழும் உரிமை பெரியது.” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
-- “என் ரத்த நாளங்களிலிருந்து அணுக்கதிர் வீச்சு முழுமையாக விலகவில்லை. என் குழந்தைகளுக்கும் அதே நிலை. ஆனால், உலகம் பாடம் கற்கவில்லை என்றே தோன்றுகிறது.” – ட்சுடோமு யாமகுச்சி (ஹிரோஷிமா, நாகசாகி இரண்டு அணுகுண்டுத் தாக்குதலிலும் உயிர் பிழைத்த ஒரே மனிதர் – 2009-ல் அளித்த பேட்டியில்)
-- “ஏனைய விலங்குகள் போலன்றி, மனிதன் தனக்குள் தானே எப்போதும் எதையோ பேசியபடியே இருப்பதை நிறுத்த முடிவதில்லை. உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதை நிறுத்த எவ்வளவு முயன்றாலும் முடிவதே கிடையாது.” – நோம் சாம்ஸ்கி.
-- “பழைய அரைத்த மாவையே அரைத்து, பி.எச்.டி. வாங்கி, அதிகாரக் குழுமத்தில் இடம் பிடித்து... வரும் சந்ததியையும் வீணடிக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் (IT sector) லட்சக்கணக்கான இளைஞர்களை இழுத்து வீணடித்து விட்டது. அங்கே ஒரே மாதிரி வேலையை, இரவும் பகலும் பார்த்து, தனது இளமையை முற்றிலும் பணமாக்குவது தவிர, அறிவியலுக்கு அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.” – சி.என்.ஆர். ராவ் (பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி)
     இப்படி ஏராளமான அரிய செய்திகளும், சிந்தனைகளும் புத்தகம் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன. குறைகளும் உண்டு. மிகச் சுமாரான மொழியாக்கமும், எழுத்துப் பிழைகளும் தடங்கல்களாக நிற்கின்றன. பொதுவான நூலாக இன்றி, நூலாசிரியர், தன் கருத்துகளுக்கு ஏற்ற அறிஞர்களின் கருத்துகளை மட்டும் தேர்வு செய்திருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. குறிப்பாக, நாத்திகவாதமும், இடதுசாரிப் பற்றும் கொஞ்சம் தூக்கலாக உள்ளது.

     மொத்தத்தில், அனைவரும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டிய அறிவுப் பெட்டகம். பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் இந்த நூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக