செவ்வாய், 5 நவம்பர், 2013

யோசி - மாத இதழ் (A Tamil Magazine from YOSI)


 

நண்பர்களே..!

வரும் டிசம்பர் 2013 முதல்> ஒரு புதிய பத்திரிக்கையை> மாத இதழாக வெளிக்கொணரத் திட்டமிட்டுள்ளோம். ஆண்டு சந்தா ரூ. 300 மட்டுமே..! தங்கள் ஆதரவை வேண்டுகிறோம்..! விவரங்களுக்கு அழைக்கவும் 98429 30459.

இந்த இதழ் எதற்காக> யாருக்காக..? இதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறோம்..? போன்ற கேள்விகளுக்குப் பதிலாக வர உள்ள> முதல் இதழின் தலையங்கம்... உங்கள் பார்வைக்கு இப்போதே...

 
Nahrp..!
rpe;jidia nrk;ikahf;f...
cs;sq;fis ntz;ikahf;f...
ghujj;ijg; gRikahf;f...

Nahrp..! - ,J>
NgUf;fhd ,jo; my;y..!
vy;yh CUf;fhd ,jo;>
jkpo; mwpe;j ghUf;fhd ,jo;..!

,J> fl;rp rhu;e;jJ my;y..!
fhl;rp rhu;e;jJ..!
kdpju;fspd; ek;gpf;ifiaAk;> kfpo;r;rpiaAk;
khwhky; fhf;Fk;> kPl;rp rhu;e;jJ..!

,J> kjk; jUtJ my;y..!
khje;NjhWk; tUtJ..!
,k;khjk; kl;Lky;y>
ve;ehSk; gad;jUk; Ntjnkd cupaJ..!

vq;fs; ,jo;
cq;fis> khw;wp Nahrpf;fr; nrhy;Yk;
kw;WnkhU khWgl;l ,jo; my;y..!
rPu;NfLfis khw;w> Nahrpf;fr; nrhy;yp>
Neu;epw;Fk; kfj;jhd ,jo;..!

,J vq;fs; ,joh..? Mk;..!
,J cq;fs; ,joh..? Mkhk;..!
mg;gbahdhy;>
,J ek; ,joh..? Mkhk;.. Mkhk;..!

..?!...?!...?!...

gag;glhjPu;fs;..! - ,J
kaf;fk; Cl;Lk; ,jo;f;fyg;G my;y..!
tpopg;Gzu;it tpijf;Fk; ,jaf;fyg;G..!
rpj;jpuk; gilf;Fk; tz;zf;fyg;G my;y..!
rupj;jpuk; gilf;Fk; vz;zf;fyg;G..!

,q;Nf>
ryryg;G ,y;iy> fyfyg;G cz;L..!
Vkhw;Wk; gsgsg;G ,y;iy> Vw;wptpLk; gupkspg;G cz;L..!
vjw;Fk;> ahUf;Fk;> vg;NghJk;
ntyntyg;G ,y;iy> nty;Yk; el;G cz;L..!
vijAk; rhjpf;fhj> ntWk;
thasg;G ,y;iy> tha;ik mspg;G kl;LNk..!

,J>
ahiuAk; Gz;gLj;Jk; ,jo; my;y..!
,isQu;fisg; gz;gLj;Jk; ,jo;..!

Vd; ,isQu;fs;..?
,uz;L fhuzq;fs;...
xd;W... vq;fs; ,dk; - vq;fshy; KbAk;..!
,uz;L... vjpu;fhy kdk; - xUehs; tpbAk;..!

gz;gLj;j KbAkh ck;khy;..?
Vu;f;fyg;ig nfhz;L kz;iz coyhk;...
vd;d fyg;ig nfhz;L vd;id cOtPu;..?
,J ,isQu;fspd; Nfs;tp.

vOj;ijf; fUtpahf;fp cq;fs; vz;zk; cONthk;..!
caUk; gad;kukhf;f> cukha; tpONthk;..!
Njhspy; ifNghl;L> mf;fiwaha;j; njhONthk;..!
Njit Vw;gl;lhy;> tp];t&gkha; vONthk;..!
,J vq;fs; gjpy; my;y Nts;tp..!

திங்கள், 22 ஜூலை, 2013

“பழகப் பத்து” – மதிப்பெண்கள் அதிகரிக்க..!

பள்ளி மாணவர்களாக இருப்பவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதும், அதில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும், மிகப் பெரிய பிரச்சனைகளாகக், கவனிக்கப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது. கடுமையான போட்டிச் சூழலின் காரணமாகத், தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் அதிகமான மன அழுத்தமும், கவலையும் அடைகிறார்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதும், படிப்பதை ஏதோ “க~;டமான வேலை” போன்ற எண்ணத்தை மாற்றி, சுலபமாகக் கற்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருவதும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நிச்சயமாக உதவும். அப்படி, மாணவர்கள், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டுமல்லாது, சிறப்பாகக் கற்றுக்கொள்ளவும் உதவும், நுணுக்கமான வழிகள் (Accelerated Learning Techniques) என்று அழைக்கப்பெறுகின்றன. அதில், லட்சக்கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்த என் அனுபவத்தில், சிறந்த பத்து வழிமுறைகளை, மாணவர்கள் பழகிப், பயன்பெறுவதற்காக அளிக்கிறேன்.
 
1) கேள்வி கேளுங்கள் (Ask Questions)
 
   பொதுவாகவே, கேள்வி கேட்பதே நம் அறிவைப் பெருக்கும். விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் என்று தெரியும் நமக்கு, அந்த இருவரின் முழுப்பெயரும் தெரிவதில்லை. காரணம், இதுவரை, நாம் யாரிடமும், இதைக் கேட்டதில்லை. கேட்டால்தான் எதுவுமே கிடைக்கும் என்பதை நாம் உணர வேண்டும். இதையே, பைபிள் “கேளுங்கள் - தரப்படும்..!” என்று நமக்கு உணர்த்துகிறது.
   மதிப்பெண்கள் அதிகரிக்க, நான் மனிதர்களைக் கூடக், கேட்கச் சொல்லவில்லை. உங்களின் பாடப் புத்தகங்களைக் கேட்கச் சொல்கிறேன். “புத்தகங்கள் தானே எங்களைக் கேள்வி கேட்கும், நாங்கள் எப்படி..?” என்று யோசிக்காதீர்கள். அதில்தான் Technique அடங்கியுள்ளது.
   முதலில், ஒரு பாடத்தைப் படியுங்கள். பிறகு, அதில் எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்று, யோசித்துப் பாருங்கள். அந்தக் கேள்விகளை ஒரு நோட்டில் குறித்து வையுங்கள். இப்போது, அந்தக் கேள்விகளை மனதில் கொண்டு, மீண்டும் ஒரு முறை பாடத்தைப் படியுங்கள். புத்தகத்தில், விடைகள் காட்சிதரும். எளிமையாக மனப்பாடம் ஆகும்.
   இதுநாள் வரை, புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் படித்ததால்தான், அது மனதில் நிற்கவில்லை. கேள்வி உங்களுடையதாக இருந்தால், பதிலைத் தேடுவதில் ஆர்வம் இருக்கும். தேடிக் கிடைத்த பதில், ஒருநாளும் மறக்காது. விதவிதமாகக் கேள்விகளை, நீங்கள் தயாரிப்பதால், முக்கியக் கேள்விகள், புத்தகத்தில் இல்லாத கேள்விகள் போன்ற எந்தப் பிரச்சனையும் எழாது. தேர்வில் எப்படிக் கேள்வி வந்தாலும், விடை உங்களிடம் தயாராக இருக்கும். மதிப்பெண்கள் தாமாக அதிகரிக்கும்.

2) குறிப்பு எடுங்கள் (Take Notes)
 
   குறிப்பு எடுப்பது என்பது மிகவும் நல்ல பழக்கம் ஆகும். யாரோ தயாரித்த வினா-விடைகளைக் குறிப்புகள் (Notes) என்ற பெயரில் கடைகளில் வாங்கிப் படிப்பதால், எந்த முன்னேற்றமும் இருக்காது. வகுப்பறையில் பாடம் நடத்தப்படும்போது, எடுக்கும் குறிப்புகளே அதிகப் பலனைத் தரும்.
   குறிப்பு எடுப்பது என்றவுடன், ஆசிரியர் போர்டில் எழுதுவதைப் பார்த்து, நோட்டில் எழுதுவதைச் சொல்வதாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அதற்குப் பெயர் காப்பி அடிப்பது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது தரும் விளக்கங்களை, மாணவர்கள், தங்களுக்குப் புரியும் வகையில், சின்னச் சின்ன வார்த்தைகளாகக், குறித்துக் கொள்வதே, குறிப்பு எடுத்தல் ஆகும். இந்தக் குறிப்புகள், மற்றவர்களுக்குப் புரியும் வகையிலோ, முழுமையான வாக்கியங்களாகவோ இருப்பது அவசியமில்லை. எழுதிய மாணவனுக்கு மட்டும் புரிந்தால் போதும்.
   குறிப்பு எடுத்தல் குறித்து, வெளிநாடுகளில், தனி வகுப்புகளே எடுக்கிறார்கள். அவ்வளவு முக்கியமான விஷயம் இது. ஒரு சிறந்த ஆசிரியர், முறையாகக் கற்பிக்கும்போது, ஒழுங்காகக் கவனித்துத், தெளிவாகக் குறிப்புகள் எழுதிவிட்டால், பல மணி நேரம் படிக்கவே, அவசியம் இருக்காது. முழுப் பாடத்தையும், மீண்டும், மீண்டும் படிக்கத் தேவையில்லை. அந்தக் குறிப்புகளை மட்டும் அடிக்கடி திரும்ப வாசித்தாலே, முழுப்பாடமும் நினைவுக்கு வந்துவிடும்.
 
3) புரிந்து கொள்ளுங்கள் (Understand)
 
   ஒரே ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள், வௌ;வேறு மதிப்பெண்கள் எடுப்பதற்கு முக்கியக் காரணம், அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தால்தான். எப்படிப் படிக்கிறோம் என்பதை விட, எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே முக்கியமானது. அதனால்தான், ஒரே திருக்குறளுக்கு, நூற்றுக்கணக்கான விளக்க உரைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
   “ப்ரண்ட்ஸ்” படத்தில், நடிகர் வடிவேலுவின் “ஆணியே புடுங்க வேணாம்” என்ற தொடர் வரும், நகைச்சுவைக் காட்சியை நாம் எல்லோரும் பார்த்து ரசித்திருப்போம். ஆனால், அந்தக் காட்சியைக் காணும்போது, சுவரில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கினால், அந்த இடத்தில் ஒரு ஓட்டை இருக்கும் என்பதைக் கவனித்து, “ஒரு ஆணி கூட, தான் இருந்த இடத்தில் ஒரு தடத்தைப் பதிக்கிறதே..! பல ஆண்டுகள் இந்த உலகில் வாழும் மனிதர்களாகிய நாமும், ஒரு சாதனை செய்து, தடம் பதிக்க வேண்டும்..!” என்று புரிந்துகொண்டால், எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்..! அதுதான், சிறப்பாகப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம்.
   எனவே, எந்தப் பாடத்தையும், கணக்கு, அறிவியல் உட்பட, முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வெறும் மனப்பாடம், எதற்கும் உதவாது... மதிப்பெண்கள் வாங்குவதற்கும்தான்...
 
4) மகிழ்ச்சி காணுங்கள் (Develop Interest & Fun)
 
   சில மாணவர்கள், புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருகிறது என்கின்றனர். இன்னும் சிலருக்கு, அது எரிச்சல் தரும் விஷயமாக, வேறு சிலருக்கு அது பளுதூக்குதல் போன்ற கடினமான செயலாக உள்ளது. இதை எப்படி மாற்றுவது..?
   வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ இரண்டு வழிகள்தான். ஒன்று பிடித்ததைச் செய்வது. மற்றொன்று, செய்வதைப் பிடித்ததாக மாற்றிக்கொள்வது. படித்துத்தான் ஆக வேண்டும். பிடிக்கவில்லை என்று சொல்லிப் பயனில்லை. எனவே, படிப்பை நமக்குப் பிடித்தவகையில் மாற்றிக் கொண்டுவிட்டால், பிறகு கவலையே இல்லை. அது எப்படி மாற்றுவது..?
   உதாரணமாக, உங்களுக்கு ஆங்கிலம் பிடிக்கவில்லை. ஆனால், தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பிடிக்கும் என்றால், திரைப்படப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பாடுங்கள். முழுவதும் மாற்ற வேண்டியதில்லை. தமிங்கிலத்தில் (Tamglish) பாடினாலே போதும். கவனம்... பாட்டின் ராகம் மாறக்கூடாது. இந்தப் பயிற்சி, கேட்பதற்கும், செய்வதற்கும் நகைச்சுவையாக இருந்தாலும், மிகவும் உபயோகமானது. ஆங்கில வார்த்தைகள் நிறையத் தெரிந்து கொள்ளவும், தெரிந்த வார்த்தைகளைத் தேவையான போது நினைவுகூறும் சக்தி பெறவும் மிகவும் பயன்படும். (எ.கா.: “Small Small ஆசை... Wings அடிக்க ஆசை...” பாடல் புரிகிறதா..? சரி... “ஆசை”-க்கு ஆங்கிலத்தில் என்ன..? தேடினால், ஆர்வம் பிறக்கும்... ஆங்கிலம் கற்கும் Desire அதிகரிக்கும்)
   இன்னொரு வழி... விளையாட்டு... உங்கள் பாடங்களை வைத்துப் புதிய, புதிய விளையாட்டுகளை, புதிர்களை உருவாக்குங்கள். பாடத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, கணக்கில் புதிய பார்முலாக்களை நீங்களே கண்டுபிடிக்கலாம். ஏதேனும் ஒரு எண்ணை, இன்னொரு எண்ணுடன் பெருக்கி, விடையை வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, வேறு ஏதேனும் புதிய முறையில், அதே விடையைக் கொண்டுவர முடியுமா என்று பல வழிகளில் முயன்று பாருங்கள். கண்டுபிடித்த புதிய வழிமுறை, சரியானதா என்பதைப், பல எண்களுடன் பெருக்கி சோதித்துப் பாருங்கள். இதனால், கணக்கில் ஆர்வம் அதிகரிக்கும். எளிதாகப் புரியும்.
   அதேபோல், உங்கள் நண்பரிடம், பாடப் புத்தகத்தைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பக்கத்தின் எண்ணை சொல்லச் சொல்லுங்கள். அந்தப் பக்கத்தில், எந்தப் பாடம், என்ன பகுதி வரும் என்பதை நீங்கள் யூகித்துச் சொல்ல முயற்சி செய்யுங்கள். இப்படி தொடர்ந்து விளையாடினால், ஒரு காலகட்டத்தில், பாடப் புத்தகம் முழுதும் உங்கள் மனக்கண்ணில் தோன்றத் தொடங்கிவிடும். பிறகென்ன..? மதிப்பெண்கள் அதிகரிக்கும். சுலபம்தானே..?
 
5) ஐம்புலன்களையும் பயன்படுத்துங்கள் (Involve more senses)
 
   படிப்பது என்பது எப்போதும் போர் (Bore) அடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஏன் தெரியுமா..? படிக்கும் போது, கண்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கிறோம். மற்ற உறுப்புகள் சும்மா இருப்பதால், போர் அடிக்கிறது. மேலும், ஒரே உறுப்புக்கு அதிக வேலை கொடுப்பதால், சீக்கிரமே சோர்வு அடைகிறோம். எனவே, ஐம்புலன்களில் முடிந்தவரை, இரண்டு - மூன்று உறுப்புகளையாவது பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
   பாடங்களைப் படமாக மாற்றிப் பார்ப்பது, இசையாக்கிக் கேட்பது, விளையாட்டு போன்ற செயல்களாக மாற்றிச் செய்வது போன்ற பல வழிகளில் இதைச் செய்யலாம். ஆனால், யார் எந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்பது, நீங்கள் கற்கும் வழிமுறையைப் (Learning Style) பொறுத்தது. நீங்கள் எந்த முறையில், அதிகமாகக் கற்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் வழியை, அடுத்த தலைப்பில் பார்ப்போம்.

6) கற்கும் வழிமுறையைக் கண்டுபிடியுங்கள் (Plan to your learning Style)
 
   பொதுவாக, நாம் அனைவரும் மூன்று வழிகளில் கற்றுக்கொள்கிறோம். அவை பார்த்துக் கற்பது (Visual), கேட்டுக் கற்பது (Auditory) மற்றும் செய்து கற்பது (Kinesthetic) ஆகியன ஆகும். ஒரு ஆய்வின் படி, மனிதர்களில், 65 சதவீதம் பேர் பார்த்துக் கற்கும் திறன் மேம்பட்டவர்களாகவும், 30 சதவீதம் பேர் கேட்டுக் கற்கும் திறன் மிகுதியானவர்களாகவும், 5 சதவீதம் பேர் செய்து கற்கும் திறன் அதிகமாக உடையவர்களாகவும் கணிக்கப்பட்டுள்ளனர். இதில் நீங்கள் எந்தத் திறன் அதிகமாக உடையவர் என்பதைக் கண்டுபிடியுங்கள்.
   தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரே மாத்திரையால், எல்லா விதமான தலைவலியையும் தீர்க்க இயலாது. காரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்தால்தான், அதற்குரிய மருந்தை உட்கொள்ள முடியும். அதேபோல்தான், உங்கள் கற்கும் வழிமுறைக்கேற்ப, நீங்கள் படிக்கும் முறையும் இருந்தால்தான், சுலபமாகப் பதிவுசெய்யவும், நினைவு கூரவும், அதிக மதிப்பெண் பெறவும் முடியும்.
   உதாரணமாக, நீங்கள் பார்த்துக் கற்கும் திறன் அதிகமுடையவர் எனில், பாடக்கருத்துகளைப், படங்களாக (Mind Map) வரைந்து வைத்து, அதை அடிக்கடி பார்ப்பதின் மூலம் பலனடையலாம். கேட்பதால் கற்கும் திறன் அதிகமுடையவர் எனில், பாடங்களை ஒருமுறை சத்தமாகப் படித்து, அவற்றை ஏதேனும் ஒலிக்கருவியில் (Tape, IPod or Mobile) ரெகார்ட் செய்து வைத்துக் கொண்டு, அடிக்கடி கேட்கலாம். செய்து கற்கும் திறன் அதிகமுடையவர்கள், எழுதிப் பார்ப்பது, பாடங்களைப் பயன்படுத்தி விளையாடுவது போன்றவற்றின் மூலம் பயன் பெறலாம்.
 
7) பிரைம் டைமில் அதிகம் படியுங்கள் (Read more on Prime Time)
 
   டி.வி. சேனல்களில், அதிகம் பேர் பார்க்கும் நேரம் என்று கருதப்படும் நேரம், பிரைம் டைம் என்று அழைக்கப்படுகிறது. நமக்கும் கூட பிரைம் டைம் உண்டு. ஒரு நாளை இரண்டு மணி நேரப் பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் படித்தால், உங்களுக்கு நன்றாகப் புரிவது “மாதிரி”, மனப்பாடம் ஆவது “மாதிரி” இருக்கிறதோ, அந்த நேரம்தான் உங்கள் பிரைம் டைம்.
   நன்றாகக் கவனியுங்கள். புரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. புரிவது “மாதிரி” இருந்தாலே போதும். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில், நடிகர் ரமேஷ்கண்ணா “சைக்கிள் மாதிரி..”, “கட்டில் மாதிரி...” என்று சொல்வாரே அப்படி...
   பொதுவாகக், காலை 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில், காற்று தூய்மையானதாக, ஆக்ஸிஜன் மிகுந்ததாக இருக்கும்... அதனால் இரத்த ஓட்டம் நன்றாக இருந்து மூளை சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால், படிப்பதற்கு மிகவும் உகந்த நேரம். ஆனால், சிலருக்கு இரவில் படிப்பதுதான் வழக்கமாக இருக்கும். பரவாயில்லை. வேறு யாருக்காகவும் இல்லாமல், உங்களுக்காகப் படித்தீர்கள் என்றால், எந்த நேரத்திலும் படிக்கலாம். உங்கள் பிரைம் டைமில், கடினமாகத் தோன்றும் பாடங்களை அல்லது அதிக சுமையுள்ள பாடங்களைப் படிக்கலாம் என்பதுதான் திட்டம்.

8) தொடர்புபடுத்திப் படியுங்கள் (Relate Unknown to Known)
 
   உங்களுக்குத் தெரியாத ஒன்றைத், தெரிந்த ஒன்றோடு தொடர்புபடுத்திப் படித்தால், சுலபமாகப் புரியும். எளிதில் மனதில் பதியும். உதாரணமாக, நம் கழுத்தின் நடுவில், சிறிய கட்டி போன்று உள்ள அமைப்பை, வழக்கு மொழியில் “சங்கு” என்கிறோம். அதற்கான, ஆங்கில வார்த்தை “Adam's Apple” என்பதாகும். இதை மனப்பாடம் செய்யாமல், நாம் அறிந்த ஆதாம், ஏவாள் கதையுடன் தொடர்புபடுத்திப் படித்தால், வாழ்நாள் முழுவதும் மறக்காது.
   (உலகைப் படைத்த கடவுள், ஆதி மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாளிடம் “நீங்கள் இந்த உலகில் எதை வேண்டுமானாலும் துய்க்கலாம். ஆனால், இந்த ஒரு ஆப்பிள் மரத்தின் பழத்தை மட்டும் உண்ணக் கூடாது” என்று ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காட்டிச் சொல்லிவிட்டாராம். ஆர்வம் தாங்காத ஏவாள், அதைப் பறித்துத் தரச் சொல்லி ஆதாமை வற்புறுத்தினாளாம். கடவுள் தடை செய்த ஆப்பிளை உண்பதால், ஏவாளுக்குத் தீமை ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று கலங்கிய ஆதாம், அந்த ஆப்பிளை முதலில், தான் உண்டுவிட்டாராம். பதறிப்போன ஏவாள், ஆப்பிள் வயிற்றுக்குள் செல்லாதவாறு, ஆதாமின் கழுத்தைப் பிடித்து இறுக்கினாராம். அந்த ஆப்பிள் துண்டு, ஆதாமின் கழுத்திலேயே தங்கி விட்டதாம்..!)
   எதோடு தொடர்புபடுத்துகிறீர்கள் என்பதை விட, எப்படித் தொடர்புபடுத்தி நினைவில் பதிய வைக்கிறீர்கள் என்பதே முக்கியம். நமக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு நபரை, அவரின் சாயலில் இருக்கும் ஒரு பிரபலமான நபரை வைத்து நினைவில் கொள்வதைப் போலத்தான், இந்த முறையும்.

9) தொகுத்துக் கொள்ளுங்கள் (Organize Information)
 
   சில மதிப்பெண்களில் சதத்தையோ, முதல் மதிப்பெண்ணையோ தவறவிடும் மாணவர்கள், பொதுவாகச் செய்யும் தவறு, கவனப் பிழை (Careless Mistake) ஆகும். இதைச் சரிசெய்ய, ஒரு சுலபமான வழிமுறைதான், தொகுத்துக்கொள்ளுதல். பேச்சாளர்கள் பலரும் கையில் குறிப்புகள் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு சிலர், இதை முதன்மையானது, இரண்டாவது... என்று வரிசைப்படுத்தித் தொகுத்து வைத்திருப்பார்கள். இப்படித் தொகுத்து வைத்திருப்பவர்கள், தங்கு தடையின்றி உரையாற்றுவது எளிதாக இருக்கும்.
   அதுபோல, மாணவர்கள், தாங்கள் படிக்கும் பெரிய வினாக்களுக்கான விடைகளின், முக்கிய விவரங்களை (Points) வரிசைப்படுத்தி, ஒரு சிறிய நோட்டில் எழுதி வைத்திருந்தால், தேர்வு நாளின் காலையில், விரைவாகத் திருப்பிப் பார்த்து, நினைவு கூறுவதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு செய்திகளை முறைப்படித் தொகுத்துக்கொண்டால், நினைவுச் சங்கிலி அறுபடாமல், தொடர்ச்சியாக இருந்து, முழுமையான விடையையும், ஒரு செய்தி கூட விடுபடாமல் எழுத முடியும். இடையில் வரும் ஒரு வரியிலிருந்து பாடும்போது நினைவுக்கு வராத சில திரைப்படப் பாடல்களை, முதல் வரியிலிருந்து பாடினால், முழுமையாக நினைவுக்கு வருவது போல, இந்த தொகுத்து வைத்துக்கொள்ளும் முறையும் உதவும். பெரிய வினாக்கள் மட்டுமல்லாமல், பாடம் முழுமைக்கும் கூட இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
 
10) சொல்லிக் கொடுங்கள் (Teach someone else)
 
   குறிப்பிட்ட பாடப்பகுதியினைப் படிக்கப், புரிந்துகொள்ள க~;டப்படும், உங்கள் சக மாணவர் ஒருவருக்காவது, சொல்லிக் கொடுங்கள். மற்றவர்களுக்குப் பாடம் நடத்துவதால், இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, தெரிந்த பாடப்பகுதி, மீண்டும் நினைவுகூரப்படும். அதனால், அப்பகுதி நமக்கு மேலும் வலுவாக மனதில் பதியும். இரண்டாவது, மற்றவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், முதலில் நமக்கு, அப்பகுதி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மானம் போய்விடும். அதற்காகவாவது, அப்பகுதியை நாம் ஐயமறக் கற்போம்.
   மூர்ஷிதாபாத்தின் “பாபர் அலி”, பாட்னாவின் “பாரதி” போன்ற மாணவர்கள், இதுபோல சொல்லிக்கொடுக்கத் தொடங்கித், தற்போது தம் பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், முறைசாராப் பள்ளியையே நடத்தி வருகின்றனர். அவர்களைப் போல பிறர் நலனுக்காக நாம் சேவை செய்யாவிட்டாலும், நம் சுயநலத்துக்காகவாவது, ஒரு பின்தங்கிய மாணவருக்குப், பாடம் கற்பிக்கலாமே..!

ஞாயிறு, 14 ஜூலை, 2013

வாழ்வும், சாவும் நம்(பிக்)கையில்..!

           “என்னைக் கூட்டிக்கிட்டு போடான்னு தினம்தான் வேண்டிக்கிறேன். அந்தக் கடவுளுக்கு காது கேட்கவே மாட்டேங்குது” என்று அன்றாடம் புலம்பும் முதியவர்கள்... “இந்தக் குடும்பத்துல வாழறது என் தலையெழுத்து. சாக ஒரு வழி கிடைக்கலையே” என்று அரற்றும் கணவன், மனைவிமார்கள்... கோடிக்கணக்கான பெண்களில் யாரோ ஒருத்தி, தன் காதலை ஏற்கவில்லை என்பதற்காக வி~ம் குடிக்கும் இளைஞர்கள்... வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கான தேர்வுகளில் வெல்ல வேண்டியிருப்பது தெரியாமல், ஒரே ஒரு வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்... தான் இறந்துவிடுவோமா என்ற அச்சத்திலேயே தினம் தினம் இறந்துபோகும் நோயாளிகள்... இறந்துவிடக் கூடாது என்று, உயிர் மீது அதீத ஆசை கொண்டு, எச்சரிக்கை என்ற பெயரில் எல்லாரையும் கலங்கடிக்கும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்... அப்பப்பா..! இந்த உலகில் எல்லா மனிதர்களும், வாழ்வதை விட சாவதைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார்களோ..? நானும் சிந்திக்கிறேன்...
 
         பொதுவாக நாம் எல்லாரும் சொல்வோம் - நமக்கெல்லாம் பிறந்த தேதி தெரியும், இறக்கும் தேதி தெரியாது என்று. ஆனால் உண்மையில் யோசித்துப் பார்த்தால், நாம் பிறந்த பின்னர்தான், நமக்குப் பிறந்த தேதி தெரியும். அதற்கு முன் தெரியாது. அதே போல் தான், இறக்கும் வரையில், நம் இறந்த தேதியும் தெரியாது. வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும் இரகசியமே அதுதானே! கண்ணதாசன் கூட சொல்வாராம் - “எனக்கு சாவைக் கண்டு பயமில்லை. ஏனென்றால் நான் இருக்கும் வரை அது என்னிடம் வரப்போவதில்லை. சாவு வரும்போது, நான் இருக்கப் போவதில்லை” என்று.
   
          நாம் அனைவருமே, சாவைப் பற்றிப் பயப்படுகிறோம். கவலைப்படுகிறோம் அல்லது குறைந்தபட்சம் சிந்திக்கிறோம். யோசித்துப் பார்த்தால், நம்மை, நம் மரணத்தைத் தவிர, மற்ற எல்லா மரணங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கிறது. சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களால் உயிரிழப்போர், போர்கள், குண்டுவெடிப்புகள், வன்முறைகள், கொலைகள், விபத்துகள் மற்றும் நோய்களினால் மாண்டு போவோர் என்று நித்தம் நித்தம், ஊடகங்களின் வழியே நாம் அறியும், நமக்கு நேரடியான உறவோ, தொடர்போ இல்லாத எல்லா மனிதர்களின் மரணங்களும், நம்மைக் கலங்க வைக்கிறது. வைக்க வேண்டும். அப்போதுதான், நம்மிடம் மனித நேயம் மிச்சம் இருக்கிறது என்று பொருள்.
   
             மேற்சொன்ன மரணங்கள் ஒரு சில நிமிடங்களில், நம் எண்ணங்களை விட்டு அகன்று விடுகின்றன. ஆனால், நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் மரணம், சில நேரங்களில் நம் வாழ்க்கையையே பாதிக்கிறது. மரணம் என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது, வள்ளுவர் சொல்வது போல், இந்த உலகமே “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்தது” என்பன போன்ற உண்மைகளை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், நாம் ஏன் இந்த மரணங்களால் பாதிக்கப்படுகிறோம்? – யோசி!
  
        ஒரு பக்கம் பார்த்தால், மரணம் அடைந்தவரின் சடலத்தருகே இருந்து கொண்டு, இரவு பகலாக ஒப்பாரி வைக்கிறோம். இன்னொரு பக்கம் பார்த்தால், பிணத்தின் முன் ஆடுகிறோம், வெடி வெடிக்கிறோம், படையல் என்று விருந்து உண்கிறோம். சற்றே குழப்பமாகத்தான் உள்ளது. நாம் மரணத்தை வெறுக்கிறோமா அல்லது கொண்டாடுகிறோமா..?
   
         என்னைப் பொறுத்தவரை, மரணம் என்பது கூட, பல் துலக்குவது, குளிப்பது போன்ற ஒரு சராசரி நிகழ்வே ஆகும். அதைக் கண்டு நாம் பயப்படுவதோ, கவலைப்படுவதோ, கொண்டாடுவதோ, வெறுப்பதோ பயனில்லாதது. நான், இந்த சமூகத்தில் காணப்படும் பல அவலங்களை எண்ணிப் பலவாறும் கவலைப்பட்டிருக்கிறேன். எனது பலநாள் உறக்கங்களைத் தொலைத்திருக்கிறேன். ஆனால், மரணங்கள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. எந்த சாவு வீட்டிற்கும் சென்று நான் அழுததே இல்லை. அவ்வளவு ஏன்? இந்த உலகிலேயே, நான் மிகவும் நேசிக்கும் உயிரான என் அம்மாவிடமே, நான் சொல்வதுண்டு “நீ செத்தால், நான் அழ மாட்டேன்” என்று.
   
            உடனே, என்னை இரக்கமே இல்லாத அரக்கன், அன்பே இல்லாத ஜடம் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். நான் கொஞ்சம் பிராக்டிக்கலாக எதையும் அணுகுபவன். அவ்வளவுதான். மரணமடைந்தவர்களுக்காக அழுவதை விட, அந்த மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதையும், உதவி செய்வதையுமே முக்கியமாக எண்ணுபவன் நான். மரணத்தைக் கண்டு பயப்படுவர்களாலும், கவலைப்படுபவர்களாலும் எந்த உதவியையும் செய்ய முடியாது. விவேக் ஒரு படத்தில் இதையே கிண்டலாகச் சொல்வார் “நம்மாளுங்க, இருக்கும் போது தண்ணி கூட தரமாட்டார்கள். ஆனால், செத்தபிறகு பால் ஊற்றுவார்கள்” என்று. இறந்து போன என் சித்தப்பா மீது எனக்குப் பாசம் இருந்தாலும், அவரை விட, சோகத்தில் தவிக்கும் என் தம்பியின் நலனே முக்கியம் எனக் கருதுபவன் நான்.
   
            பல நேரங்களில், உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் அறிவுக்கு வழங்குவதில்லை என்னும் கருத்துடையவன் நான். சற்றே சிந்தியுங்கள். நம் வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் என்ன செய்வோம்..? அழுவதாலோ, புலம்புவதாலோ, ஊரைக் கூட்டுவதாலோ ஏதாவது பயன் கிடைக்குமா? அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை அளிப்போம். (சிலர், நோயாளிகளிடமும், அந்த நோயைப் பற்றியே பேசி, அவரின் நம்பிக்கையைக் குலைக்கின்றனர். கேட்டால், பாசமாம்... அக்கறையாம்... என்ன கொடுமை சார், இது..?) நோயாளி உடல் நலம் பெறும் வரை, நம்பிக்கையை மட்டுமே அளிப்போம். அளிக்க வேண்டும். அப்படியிருக்க, நாம் ஒன்றும் செய்ய முடியாத, தவிர்க்க முடியாத, மரணத்தின் போது மட்டும், ஏன் இந்தச் சிக்கல்கள்...? – யோசி!
   
           என்னைப் பொறுத்தவரை, மரணத்தின் மீது நாம் செலுத்தும் கவனத்தை விட, அதிகமாக, வாழ்வதில்தான் செலுத்த வேண்டும். மரணம் என்பதே, நாம் வாழும் நாட்களைப் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் செலவழிக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்;டுவதற்கான ஒரு அடையாளம்தான். அதனால்தான், குறித்த காலத்திற்குள் செய்ய வேண்டியவற்றை, “டெட் லைன்” என்கிறோம். நான் செய்ய நினைத்த பலவற்றை, உடனே செய்து விடுவேன். என்றாவது ஒருநாள், எதிர்காலத்தில் என்றெல்லாம் நான் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. குறிக்கோள் இல்லாத வாழ்க்கையைப் பற்றி நான் சொல்லவில்லை. ஆனால், மிகவும் நீண்ட காலத்திற்கு நான் திட்டமிடுவது இல்லை என்றே சொல்கிறேன்.
   
         அதனால்தான், நிறைய பணம் சேர்ப்பதற்கு முன்னதாகவே, ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, யாரிடமும் நன்கொடை பெறாமல், கடந்த 7 ஆண்டுகளாக பல உதவிகளைச் செய்து வருகிறேன். விருது வாங்க வேண்டிய வயதில், ஆண்டுதோறும், சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கிக் கொண்டிருக்கிறேன். நான் பெரிய அளவில் ஒன்றும் சாதிக்கவில்லை. ஆனால், ஏராளமானோருக்கு, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவிக் கொண்டு இருக்கிறேன். காரணம் ஒன்றுதான். நாளையே நான் இறக்க நேர்ந்தாலும், நான் வருத்தத்தோடு, ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாத ஏக்கத்தோடு இறக்கக் கூடாது என்று நினைக்கிறேன். என்னால் என்ன முடியுமோ, அதைக் காலந்தாழ்த்தாமல் இப்போதே செய்கிறேன். அதனால்தான் வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது.
   
           நீங்களும், காலம் கடத்தாமல், நல்ல செயல்களை, உங்களால் முடிந்த சமூகப் பணிகளை உடனே செய்யுங்கள். யாருக்கும் பயனில்லாத வாழ்க்கை என்பது மரணத்தை விட மோசமானது. அப்படிப் பல காலம் வாழ்ந்த ஒருவர், தன் கல்லறையில் எழுதச் சொன்னாராம், “இவர் 40 வயதில் இறந்தார். ஆனால் 70-ஆவது வயதில்தான் புதைக்கப்பட்டார்” என்று. அதாவது, 40 முதல் 70 வயது வரை, அவர் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள். அதனால்தான், பொருட்கள் இருக்கின்றன. மனிதர்கள் வாழ்கின்றனர். எத்தனை நாள் உயிருடன் இருந்தோம் என்பதல்ல, எத்தனை நாள் பயன்தர வாழ்ந்தோம் என்பதே முக்கியம். “மண்ணில் எட்டு நாள் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது. வாழும் நாளைச் சார்ந்தது, வாழ்க்கை என்பது” என்னும் திரைப்பாடலும் இதையேதான் நினைவூட்டுகிறது.
  
             என் சிந்தனை இன்னும் நீள்கிறது. மரணங்கள், இறந்து போன மனிதர்களை விட, அவர்களை நம்பி இருந்தவர்களுக்குத்தான் அதிக பாதிப்புகளைத் தருகிறது. இந்த ஒரு உண்மையிலேயே நாம் தெரிந்து கொண்டுவிடலாம். மரணம் என்பது வேறொன்றுமில்லை, நண்பர்களே..! நாம் நம்பியவர்களின் இழப்பு, நம்மை நம்பியவர்களின் இழப்பு... சரியாகச் சொன்னால் நம்பிக்கையின் இழப்பு. இதைத்தான் விவேகானந்தர் சொன்னார் “நம்பிக்கையே வாழ்க்கை. நம்பிக்கை இன்மையே மரணம்” என்று.
   
               ஆம்..! இந்த உலகில் எத்தனை எத்தனை பேர், தங்கள் நம்பிக்கையினால் மரணத்தை வென்ற பெருவாழ்வு வாழ்ந்துள்ளனர்... வாழ்கின்றனர். எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், தங்கள் நம்பிக்கையால், மீண்டு வந்து, மாபெரும் சாதனைகள் படைக்கின்றனர். சரித்திரங்களில் மட்டுமல்ல. சமீபத்திய நிகழ்வுகளும் கூட இதைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன.
   
                இந்தியாவின் தேசிய வாலிபால் வீராங்கனை ஆருணிமா. 2011, ஏப்ரல் 12-ஆம் நாள், ஒரு ரயில் பயணத்தின் போது, கொள்ளையர்களுடன் நடந்த போராட்டத்தில், அவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து விட்டனர். அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவரது ஒரு காலில் முழங்காலுக்குக் கீழ் முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலமாக நீக்கிவிட்டனர். எல்லாரும் அந்தப் பெண்ணின் மீது இரக்கப்பட்டனர். பரிதாபப்பட்டனர். ஆனால், அந்தப் பெண் தன் நம்பிக்கையை மட்டும் விடவில்லை. தான் வாழ்வது மட்டும் முக்கியமல்ல. இந்த உலகிற்கே தான் ஒரு நம்பிக்கைச் செய்தியாக இருக்க வேண்டுமென முடிவெடுத்தாள். நடக்கக் கூட முடியாது என்ற நிலையில் இருந்த அந்தப் பெண், சில நாட்களுக்கு முன், 2013, மே 21-ஆம் நாள், யாரும் எளிதில் சாதித்து விட முடியாத சாதனையாக, உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாள்.
   
           பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றிய சிறுமிதான், பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய். இவரின் பணிகளைப் பொறுக்காத தாலிபான் படை, 2012 அக்டோபர் 9-ஆம் நாள் இவரைத் துப்பாக்கியால் துளைத்தது. குண்டடி பெற்று, பல நாட்கள் நினைவின்றிக் கிடந்த அச்சிறுமி, தீவிர சிகிச்சையின் பலனாக மீண்டும் எழுந்தாள். உடல் தேறியதும் அளித்த முதல் பேட்டியிலேயே, எந்தவிதமான மரண பயமும் இன்றித், தான் பெண் குழந்தைகளின் கல்விக்காகத் தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்தாள். தற்போது 15 வயதாகும் அப்பெண், “டைம்” பத்திரிக்கையின் நூறு சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளாள்.
   
             ஆருணிமாவும், மலாலாவும், இன்னும் இந்த உலகில் நாம் பார்க்கும் ஏராளமான எளிய மனிதர்களும், ஒன்றைத்தான் நினைவூட்டுகின்றனர். “நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல, உங்களிடம் என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்” என்ற மந்திரச் சொற்கள்தான் அவை. வாழ்வும், சாவும் நம் கையில்தான் உள்ளது. நம் நம்பிக்கையில்தான் உள்ளது.
   
              ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் சொல்வார், “சாகற நாள் தெரிஞ்சிட்டா, வாழற நாள் நரகமாயிடும்” என்று. ஆனால், உண்மை என்னவென்றால், வாழ்வைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களுக்கு, வாழ்க்கை எந்நாளும் சொர்க்கம்தான்.  சாவு என்பது எளிமையானது. அது தானாகவே ஒரு நாள் நம்மிடம் வந்தே தீரும். ஆனால் வாழ்க்கை அப்படி அல்ல. நாம்தான் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் சாதனை. அதுதான் வாழ்க்கை. அதுதான் நாம் பிறந்ததன் நோக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் அனுபவித்து, உற்சாகமாக வாழ்பவர்களுக்கு, வாழ்க்கை ஒரு வசந்தம். அவ்வாறே நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். பாடல் வழியில் சொல்வதானால்,
 
“வாழ்க்கையை நேசி... வளம்பெற யோசி..!
ஒவ்வொரு கணமும் நேசி..! இன்னும் உயர வழி என்ன யோசி..!
எது நடந்தாலும் நேசி... அடுத்து என்ன செய்யலாம் யோசி..!”
 
(இந்தக் கட்டுரை, கோவையிலிருந்து வரும் “வெற்றிப் பாதை” இதழிலும் வெளியாகியுள்ளது.)

புதன், 30 ஜனவரி, 2013

மொழி இல்லை என்றாலும் வழி இருக்கும்..!


“நீங்கள் சீக்கிரம் ஊமை ஆகிவிடுவீர்கள்..!” பொதுவாக, எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும், கலங்காத வழக்கமுடைய என்னையும், அந்த வார்த்தைகள் கொஞ்சம் அதிர்ச்சி அடையத்தான் செய்தன.

  பயிற்சிகளின் போதும், மேடைப்பேச்சுகளின் போதும், அவ்வப்போது, தொண்டை வலிக்கும். கரகரக்கும். குரல் நடுங்கும். மாற்றமடையும். எப்போதும், தற்காலிகத் தீர்வுகளின் துணைகொண்டு, சமாளித்து வந்த நான், நேற்று முன்தினம் (2013, ஜனவரி 28), சேலத்தில், ஒரு பயிற்சி நிகழ்வுக்காகச் சென்றிருந்த போது, நிரந்தரத் தீர்வு காண எண்ணி, ஒரு மருத்துவரை சந்தித்த போது, அவர் சொன்ன மறக்க முடியாத வார்த்தைகள்தான், முன்பு சொன்ன “நீங்கள் சீக்கிரம் ஊமை ஆகிவிடுவீர்கள்..”

  அதிகமான ஒலி அளவு, நீண்ட நேரம் பேசுதல், தொடரும் பயணங்கள், உடல் நலம் பேணாமை போன்ற பல காரணங்களால் என்னுடைய குரல் வளை முழுவதும் ரணப்பட்டிருக்கிறது என்றும், என்னுடைய உண்மையான குரல் மாறி வருகிறது என்றும் கூறிய அந்த மருத்துவர், உடனடியாக நான் பேசுவதை நிறுத்தாவிடில், இன்னும் சில ஆண்டுகளில், பேசும் திறனை, என் குரலை முழுவதுமாக நான் இழக்க நேரிடும் என்றும் எனக்குத் தெளிவுபடுத்தினார்.

  பிறந்து, மூன்று வயது வரை பேசாமல் இருந்தவன் நான். கடவுளின் கருணையால், என் பெற்றோரின் அன்பால் பிறகு பேசத் தொடங்கினேன். 9 வயதில் மேடையேறிப் பேசத் தொடங்கிய நான், அதற்குப் பின் பேசாமல் இருந்த நிமிடங்கள் மிகவும் சொற்பம். மூச்சை விடவும், அதிகமாகப் பேச்சை சுவாசித்தவன் நான். என்னைப் பேசக் கூடாது என்று சொன்னால் எப்படி..?

  பதினொன்றாம் வகுப்புப் படிக்கும்போது, தாடையில் அடிபட்டு, ரத்தத்தோடு மருத்துவரிடம் சென்றபோது, அவர் தையல் போட்டார். வாயின் வழியாக நீர் அருந்துவதே கடினமாக இருந்த அந்த வலிமிகுந்த நிலையிலும், பேச்சை நிறுத்தாதவன் நான். இப்பொழுது, நான் பேசப்போகும் நாட்களை எப்படி எண்ணிக்கொண்டிருப்பேன்..? சாப்பிடாமல் கூட இருப்பேன். பேசாமல் இருப்பேனா..?

  எனக்காகப் பேசியது மிகவும் குறைவு. என்னுடைய பேச்சைக் கேட்பவர்கள், அவர்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கவும், எல்லாப் பிரச்சனைகளையும் துணிவுடன் எதிர்கொள்ளவும், நம்பிக்கை மலரவும், அவர்கள் வாழ்வில் ஒரு அங்குலமாவது உயரவும் மட்டுமே, இத்தனை ஆண்டுகளாக நான் பேசிக்கொண்டே இருந்தேன். இருக்கிறேன். இனி யாருக்கும் என் பேச்சு தேவையில்லையா..?

  எட்டு டிகிரி படித்த பின்னரும், எந்த வேலைக்கும் போகாமல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை பதிவு கூட செய்யாமல், மற்றவர் நலம்பெற, என்னால் இந்த சமுதாயத்திற்குச் செய்ய முடிந்த தொண்டாகப், பேச்சை ஒரு தவமாகச் செய்து கொண்டிருக்கும் என்னால், பேசாமல் இருக்க முடியுமா..?

  எங்கு என் குரல் கேட்டாலும், உன் குரலை வைத்துதான் அடையாளம் கண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் அளவிற்கு, என் அடையாளமாகவே இருக்கும், என் குரல் இனி என்னிடம் இருக்காதா..? புதிதாக என் பேச்சைக் கேட்பவர்கள் கூட, என் கருத்துகளைத் தாண்டி, முதலில் பாராட்டுப் பெறும் என்னுடைய குரல், இன்னும் கொஞ்ச காலத்தில் மறைந்து விடுமா..? பலருக்கும் ஆறுதல் தரவும், நம்பிக்கை கூட்டவும், வழிகள் காட்டவும், தவறுகளை எதிர்த்துப் போராடவும் செய்த என் குரல், இனி வெறும் வரலாறுதானா..? அதற்கு வருங்காலம் இல்லையா..?

  யோசிக்க, யோசிக்க... எழுத, எழுத என் உள்ளம் உறைந்துபோகிறது. எனக்காக, என் வாழ்நாளில் நான் அழுததே இல்லை. அழுவதே அவநம்பிக்கையின் அறிகுறி என்று எண்ணுபவன் நான். அதனால், நல்லவேளை. கண்ணீர் வரவில்லை. அதனால், யாரிடமும் அது காட்டிக் கொடுக்கவும் இல்லை. ஏன் இப்போது மட்டும் இத்தனை நேரம் அது பற்றி சிந்திக்கிறேன்? அப்படி என்ன பெரிய பிரச்சனை..?

  எனக்கு, கேன்சர் இருக்குமோ என்ற சந்தேகித்த பொழுது கூட, நான் கலங்கவில்லையே..? நான் நடத்தி வந்த பயிற்சி நிறுவனத்தின் மீது தவறான புகார் எழுந்தபோது கூட, நான் இவ்வளவு வருந்தவில்லையே..? பல்வேறு சூழ்நிலைகளில் பணப்பிரச்சனை ஏற்பட்டபோது கூட, நான் புலம்பவில்லையே..? என் பெற்றோரின் லட்சியக் கனவாக இருந்த, சொந்த வீடு என்பதை, நான் நிஜமாக்கிய நான்கே மாதங்களில், அது இடிக்கப்படக்கூடும் என்ற தகவல் வந்த போது கூட, நான் மயங்கவில்லையே..? என் அண்ணனின் இல்லற வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையில், என் குடும்பத்தையே சிறையில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டியபோது கூட, நான் பயப்படவில்லையே..?

  காரணம் உள்ளது. என் கால்கள் பழுதானால், கைகள் உடைந்தால், காதுகள் கேட்கவில்லையென்றால், கண்களை இழந்தால் கூட, நான் இவ்வளவு சிந்தித்திருக்க மாட்டேன் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், வாயிருக்கிறது. நான் சாதித்துவிடுவேன் என்றே, இத்தனை காலமும் நம்பி வந்தேன். இப்போது, அதிலேயும் சிக்கல் என்றால்..? எனக்கு ஓவியம் வரையவோ, சிற்பம் செதுக்கவோ தெரியாது. வேறு எந்த சிறப்புத் திறமையும் கிடையாது. பேசாமல் இருந்தால், என்னால் என்ன சாதிக்க முடியும்..?

  இரண்டு நாள் மனப்போராட்டத்தின் முடிவில் ஒன்று மட்டும் தெரிகிறது. நான் எதையும் இழக்கலாம். என் நம்பிக்கையை அல்ல என்பது மட்டும் புரிகிறது.

  வாயில்லை என்றாலும், வாழ்க்கை என்னிடமே இருப்பதாக உணர்கிறேன். குரல் குலைந்து போனாலும், கொடுப்பதற்கு எனக்கு ஏதேனும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். மொழியில்லை என்றாலும், வழி இருக்கவே செய்யும் என்றே சிந்திக்கிறேன். இப்போதும், உறுதியான திட்டம் ஏதும் இல்லை. ஆயினும், திட்டம் இட வேண்டும் என்ற திடம் மட்டும் உள்ளது. நல்ல மனிதர்களின் துணையோடு, விரைவில், மிகப்பெரிய அளவில், ஏதேனும் ஒரு துறையில் சாதிப்பேன். அதற்காக, எந்தச் சோதனையையும் சந்திப்பேன். சாதிக்கும் வரை மட்டுமல்ல, சாகும் வரையிலும், தொடர்ந்து சமுதாய நலனையே சிந்திப்பேன்..!

செவ்வாய், 15 ஜனவரி, 2013

வாழ்வை நேசி... வளம் பெற யோசி..!



 இந்தப் (2013) புத்தாண்டை முன்னிட்டு, 

தேனியில் நடைபெற்ற ஒரு பயிற்சி நிகழ்வில், நான் கேட்டேன்... எதற்காக புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று..?

பலரின் கருத்துகளைக் கேட்ட பின், நான் சொன்னேன்...

வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான்... ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டியதுதான்... அவ்வாறு கொண்டாட முடியாதவர்கள், கொண்டாட மறந்தவர்கள் மற்றும் கொண்டாட்டங்களைத் துறந்தவர்கள் ஆகியோருக்கு, நினைவூட்டுவதற்காகவே, சில குறிப்பட்ட நாட்களையாவது கொண்டாட வைத்துள்ளது நம் சமூகம்.
அப்படி நம் வாழ்வைக் கொண்டாட, அறிவும், பொருளும் பெருக, உயர்வான சாதனைகள் புரிய, மேலும் வளமும், நலமும் பெறத் தேவையான, மனித வள மேம்பாட்டுப் பயிற்சிகளை, சிறந்த முறையில், கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கி வரும் நிறுவனம் தான், எங்களின் "யோசி" - ஆகும்.

தமிழகம் முழுவதும், ஆயிரக் கணக்கான பயிற்சி நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள, எங்கள் "யோசி" நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய, இந்த இணையதளத்தைக் காணுங்கள்...