பள்ளி மாணவர்களாக இருப்பவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதும், அதில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும், மிகப் பெரிய பிரச்சனைகளாகக், கவனிக்கப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது. கடுமையான போட்டிச் சூழலின் காரணமாகத், தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் அதிகமான மன அழுத்தமும், கவலையும் அடைகிறார்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வதும், படிப்பதை ஏதோ “க~;டமான வேலை” போன்ற எண்ணத்தை மாற்றி, சுலபமாகக் கற்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருவதும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நிச்சயமாக உதவும். அப்படி, மாணவர்கள், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டுமல்லாது, சிறப்பாகக் கற்றுக்கொள்ளவும் உதவும், நுணுக்கமான வழிகள் (Accelerated Learning Techniques) என்று அழைக்கப்பெறுகின்றன. அதில், லட்சக்கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்த என் அனுபவத்தில், சிறந்த பத்து வழிமுறைகளை, மாணவர்கள் பழகிப், பயன்பெறுவதற்காக அளிக்கிறேன்.
1) கேள்வி கேளுங்கள் (Ask Questions)
பொதுவாகவே, கேள்வி கேட்பதே நம் அறிவைப் பெருக்கும். விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் என்று தெரியும் நமக்கு, அந்த இருவரின் முழுப்பெயரும் தெரிவதில்லை. காரணம், இதுவரை, நாம் யாரிடமும், இதைக் கேட்டதில்லை. கேட்டால்தான் எதுவுமே கிடைக்கும் என்பதை நாம் உணர வேண்டும். இதையே, பைபிள் “கேளுங்கள் - தரப்படும்..!” என்று நமக்கு உணர்த்துகிறது.
மதிப்பெண்கள் அதிகரிக்க, நான் மனிதர்களைக் கூடக், கேட்கச் சொல்லவில்லை. உங்களின் பாடப் புத்தகங்களைக் கேட்கச் சொல்கிறேன். “புத்தகங்கள் தானே எங்களைக் கேள்வி கேட்கும், நாங்கள் எப்படி..?” என்று யோசிக்காதீர்கள். அதில்தான் Technique அடங்கியுள்ளது.
முதலில், ஒரு பாடத்தைப் படியுங்கள். பிறகு, அதில் எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்று, யோசித்துப் பாருங்கள். அந்தக் கேள்விகளை ஒரு நோட்டில் குறித்து வையுங்கள். இப்போது, அந்தக் கேள்விகளை மனதில் கொண்டு, மீண்டும் ஒரு முறை பாடத்தைப் படியுங்கள். புத்தகத்தில், விடைகள் காட்சிதரும். எளிமையாக மனப்பாடம் ஆகும்.
இதுநாள் வரை, புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் படித்ததால்தான், அது மனதில் நிற்கவில்லை. கேள்வி உங்களுடையதாக இருந்தால், பதிலைத் தேடுவதில் ஆர்வம் இருக்கும். தேடிக் கிடைத்த பதில், ஒருநாளும் மறக்காது. விதவிதமாகக் கேள்விகளை, நீங்கள் தயாரிப்பதால், முக்கியக் கேள்விகள், புத்தகத்தில் இல்லாத கேள்விகள் போன்ற எந்தப் பிரச்சனையும் எழாது. தேர்வில் எப்படிக் கேள்வி வந்தாலும், விடை உங்களிடம் தயாராக இருக்கும். மதிப்பெண்கள் தாமாக அதிகரிக்கும்.
2) குறிப்பு எடுங்கள் (Take Notes)
குறிப்பு எடுப்பது என்பது மிகவும் நல்ல பழக்கம் ஆகும். யாரோ தயாரித்த வினா-விடைகளைக் குறிப்புகள் (Notes) என்ற பெயரில் கடைகளில் வாங்கிப் படிப்பதால், எந்த முன்னேற்றமும் இருக்காது. வகுப்பறையில் பாடம் நடத்தப்படும்போது, எடுக்கும் குறிப்புகளே அதிகப் பலனைத் தரும்.
குறிப்பு எடுப்பது என்றவுடன், ஆசிரியர் போர்டில் எழுதுவதைப் பார்த்து, நோட்டில் எழுதுவதைச் சொல்வதாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அதற்குப் பெயர் காப்பி அடிப்பது. ஆசிரியர் பாடம் நடத்தும்போது தரும் விளக்கங்களை, மாணவர்கள், தங்களுக்குப் புரியும் வகையில், சின்னச் சின்ன வார்த்தைகளாகக், குறித்துக் கொள்வதே, குறிப்பு எடுத்தல் ஆகும். இந்தக் குறிப்புகள், மற்றவர்களுக்குப் புரியும் வகையிலோ, முழுமையான வாக்கியங்களாகவோ இருப்பது அவசியமில்லை. எழுதிய மாணவனுக்கு மட்டும் புரிந்தால் போதும்.
குறிப்பு எடுத்தல் குறித்து, வெளிநாடுகளில், தனி வகுப்புகளே எடுக்கிறார்கள். அவ்வளவு முக்கியமான விஷயம் இது. ஒரு சிறந்த ஆசிரியர், முறையாகக் கற்பிக்கும்போது, ஒழுங்காகக் கவனித்துத், தெளிவாகக் குறிப்புகள் எழுதிவிட்டால், பல மணி நேரம் படிக்கவே, அவசியம் இருக்காது. முழுப் பாடத்தையும், மீண்டும், மீண்டும் படிக்கத் தேவையில்லை. அந்தக் குறிப்புகளை மட்டும் அடிக்கடி திரும்ப வாசித்தாலே, முழுப்பாடமும் நினைவுக்கு வந்துவிடும்.
3) புரிந்து கொள்ளுங்கள் (Understand)
ஒரே ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள், வௌ;வேறு மதிப்பெண்கள் எடுப்பதற்கு முக்கியக் காரணம், அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தால்தான். எப்படிப் படிக்கிறோம் என்பதை விட, எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே முக்கியமானது. அதனால்தான், ஒரே திருக்குறளுக்கு, நூற்றுக்கணக்கான விளக்க உரைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
“ப்ரண்ட்ஸ்” படத்தில், நடிகர் வடிவேலுவின் “ஆணியே புடுங்க வேணாம்” என்ற தொடர் வரும், நகைச்சுவைக் காட்சியை நாம் எல்லோரும் பார்த்து ரசித்திருப்போம். ஆனால், அந்தக் காட்சியைக் காணும்போது, சுவரில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கினால், அந்த இடத்தில் ஒரு ஓட்டை இருக்கும் என்பதைக் கவனித்து, “ஒரு ஆணி கூட, தான் இருந்த இடத்தில் ஒரு தடத்தைப் பதிக்கிறதே..! பல ஆண்டுகள் இந்த உலகில் வாழும் மனிதர்களாகிய நாமும், ஒரு சாதனை செய்து, தடம் பதிக்க வேண்டும்..!” என்று புரிந்துகொண்டால், எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்..! அதுதான், சிறப்பாகப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம்.
எனவே, எந்தப் பாடத்தையும், கணக்கு, அறிவியல் உட்பட, முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வெறும் மனப்பாடம், எதற்கும் உதவாது... மதிப்பெண்கள் வாங்குவதற்கும்தான்...
4) மகிழ்ச்சி காணுங்கள் (Develop Interest & Fun)
சில மாணவர்கள், புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருகிறது என்கின்றனர். இன்னும் சிலருக்கு, அது எரிச்சல் தரும் விஷயமாக, வேறு சிலருக்கு அது பளுதூக்குதல் போன்ற கடினமான செயலாக உள்ளது. இதை எப்படி மாற்றுவது..?
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ இரண்டு வழிகள்தான். ஒன்று பிடித்ததைச் செய்வது. மற்றொன்று, செய்வதைப் பிடித்ததாக மாற்றிக்கொள்வது. படித்துத்தான் ஆக வேண்டும். பிடிக்கவில்லை என்று சொல்லிப் பயனில்லை. எனவே, படிப்பை நமக்குப் பிடித்தவகையில் மாற்றிக் கொண்டுவிட்டால், பிறகு கவலையே இல்லை. அது எப்படி மாற்றுவது..?
உதாரணமாக, உங்களுக்கு ஆங்கிலம் பிடிக்கவில்லை. ஆனால், தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பிடிக்கும் என்றால், திரைப்படப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பாடுங்கள். முழுவதும் மாற்ற வேண்டியதில்லை. தமிங்கிலத்தில் (Tamglish) பாடினாலே போதும். கவனம்... பாட்டின் ராகம் மாறக்கூடாது. இந்தப் பயிற்சி, கேட்பதற்கும், செய்வதற்கும் நகைச்சுவையாக இருந்தாலும், மிகவும் உபயோகமானது. ஆங்கில வார்த்தைகள் நிறையத் தெரிந்து கொள்ளவும், தெரிந்த வார்த்தைகளைத் தேவையான போது நினைவுகூறும் சக்தி பெறவும் மிகவும் பயன்படும். (எ.கா.: “Small Small ஆசை... Wings அடிக்க ஆசை...” பாடல் புரிகிறதா..? சரி... “ஆசை”-க்கு ஆங்கிலத்தில் என்ன..? தேடினால், ஆர்வம் பிறக்கும்... ஆங்கிலம் கற்கும் Desire அதிகரிக்கும்)
இன்னொரு வழி... விளையாட்டு... உங்கள் பாடங்களை வைத்துப் புதிய, புதிய விளையாட்டுகளை, புதிர்களை உருவாக்குங்கள். பாடத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, கணக்கில் புதிய பார்முலாக்களை நீங்களே கண்டுபிடிக்கலாம். ஏதேனும் ஒரு எண்ணை, இன்னொரு எண்ணுடன் பெருக்கி, விடையை வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, வேறு ஏதேனும் புதிய முறையில், அதே விடையைக் கொண்டுவர முடியுமா என்று பல வழிகளில் முயன்று பாருங்கள். கண்டுபிடித்த புதிய வழிமுறை, சரியானதா என்பதைப், பல எண்களுடன் பெருக்கி சோதித்துப் பாருங்கள். இதனால், கணக்கில் ஆர்வம் அதிகரிக்கும். எளிதாகப் புரியும்.
அதேபோல், உங்கள் நண்பரிடம், பாடப் புத்தகத்தைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பக்கத்தின் எண்ணை சொல்லச் சொல்லுங்கள். அந்தப் பக்கத்தில், எந்தப் பாடம், என்ன பகுதி வரும் என்பதை நீங்கள் யூகித்துச் சொல்ல முயற்சி செய்யுங்கள். இப்படி தொடர்ந்து விளையாடினால், ஒரு காலகட்டத்தில், பாடப் புத்தகம் முழுதும் உங்கள் மனக்கண்ணில் தோன்றத் தொடங்கிவிடும். பிறகென்ன..? மதிப்பெண்கள் அதிகரிக்கும். சுலபம்தானே..?
5) ஐம்புலன்களையும் பயன்படுத்துங்கள் (Involve more senses)
படிப்பது என்பது எப்போதும் போர் (Bore) அடிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஏன் தெரியுமா..? படிக்கும் போது, கண்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கிறோம். மற்ற உறுப்புகள் சும்மா இருப்பதால், போர் அடிக்கிறது. மேலும், ஒரே உறுப்புக்கு அதிக வேலை கொடுப்பதால், சீக்கிரமே சோர்வு அடைகிறோம். எனவே, ஐம்புலன்களில் முடிந்தவரை, இரண்டு - மூன்று உறுப்புகளையாவது பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
பாடங்களைப் படமாக மாற்றிப் பார்ப்பது, இசையாக்கிக் கேட்பது, விளையாட்டு போன்ற செயல்களாக மாற்றிச் செய்வது போன்ற பல வழிகளில் இதைச் செய்யலாம். ஆனால், யார் எந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்பது, நீங்கள் கற்கும் வழிமுறையைப் (Learning Style) பொறுத்தது. நீங்கள் எந்த முறையில், அதிகமாகக் கற்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் வழியை, அடுத்த தலைப்பில் பார்ப்போம்.
6) கற்கும் வழிமுறையைக் கண்டுபிடியுங்கள் (Plan to your learning Style)
பொதுவாக, நாம் அனைவரும் மூன்று வழிகளில் கற்றுக்கொள்கிறோம். அவை பார்த்துக் கற்பது (Visual), கேட்டுக் கற்பது (Auditory) மற்றும் செய்து கற்பது (Kinesthetic) ஆகியன ஆகும். ஒரு ஆய்வின் படி, மனிதர்களில், 65 சதவீதம் பேர் பார்த்துக் கற்கும் திறன் மேம்பட்டவர்களாகவும், 30 சதவீதம் பேர் கேட்டுக் கற்கும் திறன் மிகுதியானவர்களாகவும், 5 சதவீதம் பேர் செய்து கற்கும் திறன் அதிகமாக உடையவர்களாகவும் கணிக்கப்பட்டுள்ளனர். இதில் நீங்கள் எந்தத் திறன் அதிகமாக உடையவர் என்பதைக் கண்டுபிடியுங்கள்.
தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரே மாத்திரையால், எல்லா விதமான தலைவலியையும் தீர்க்க இயலாது. காரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்தால்தான், அதற்குரிய மருந்தை உட்கொள்ள முடியும். அதேபோல்தான், உங்கள் கற்கும் வழிமுறைக்கேற்ப, நீங்கள் படிக்கும் முறையும் இருந்தால்தான், சுலபமாகப் பதிவுசெய்யவும், நினைவு கூரவும், அதிக மதிப்பெண் பெறவும் முடியும்.
உதாரணமாக, நீங்கள் பார்த்துக் கற்கும் திறன் அதிகமுடையவர் எனில், பாடக்கருத்துகளைப், படங்களாக (Mind Map) வரைந்து வைத்து, அதை அடிக்கடி பார்ப்பதின் மூலம் பலனடையலாம். கேட்பதால் கற்கும் திறன் அதிகமுடையவர் எனில், பாடங்களை ஒருமுறை சத்தமாகப் படித்து, அவற்றை ஏதேனும் ஒலிக்கருவியில் (Tape, IPod or Mobile) ரெகார்ட் செய்து வைத்துக் கொண்டு, அடிக்கடி கேட்கலாம். செய்து கற்கும் திறன் அதிகமுடையவர்கள், எழுதிப் பார்ப்பது, பாடங்களைப் பயன்படுத்தி விளையாடுவது போன்றவற்றின் மூலம் பயன் பெறலாம்.
7) பிரைம் டைமில் அதிகம் படியுங்கள் (Read more on Prime Time)
டி.வி. சேனல்களில், அதிகம் பேர் பார்க்கும் நேரம் என்று கருதப்படும் நேரம், பிரைம் டைம் என்று அழைக்கப்படுகிறது. நமக்கும் கூட பிரைம் டைம் உண்டு. ஒரு நாளை இரண்டு மணி நேரப் பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் படித்தால், உங்களுக்கு நன்றாகப் புரிவது “மாதிரி”, மனப்பாடம் ஆவது “மாதிரி” இருக்கிறதோ, அந்த நேரம்தான் உங்கள் பிரைம் டைம்.
நன்றாகக் கவனியுங்கள். புரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. புரிவது “மாதிரி” இருந்தாலே போதும். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில், நடிகர் ரமேஷ்கண்ணா “சைக்கிள் மாதிரி..”, “கட்டில் மாதிரி...” என்று சொல்வாரே அப்படி...
பொதுவாகக், காலை 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில், காற்று தூய்மையானதாக, ஆக்ஸிஜன் மிகுந்ததாக இருக்கும்... அதனால் இரத்த ஓட்டம் நன்றாக இருந்து மூளை சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால், படிப்பதற்கு மிகவும் உகந்த நேரம். ஆனால், சிலருக்கு இரவில் படிப்பதுதான் வழக்கமாக இருக்கும். பரவாயில்லை. வேறு யாருக்காகவும் இல்லாமல், உங்களுக்காகப் படித்தீர்கள் என்றால், எந்த நேரத்திலும் படிக்கலாம். உங்கள் பிரைம் டைமில், கடினமாகத் தோன்றும் பாடங்களை அல்லது அதிக சுமையுள்ள பாடங்களைப் படிக்கலாம் என்பதுதான் திட்டம்.
8) தொடர்புபடுத்திப் படியுங்கள் (Relate Unknown to Known)
உங்களுக்குத் தெரியாத ஒன்றைத், தெரிந்த ஒன்றோடு தொடர்புபடுத்திப் படித்தால், சுலபமாகப் புரியும். எளிதில் மனதில் பதியும். உதாரணமாக, நம் கழுத்தின் நடுவில், சிறிய கட்டி போன்று உள்ள அமைப்பை, வழக்கு மொழியில் “சங்கு” என்கிறோம். அதற்கான, ஆங்கில வார்த்தை “Adam's Apple” என்பதாகும். இதை மனப்பாடம் செய்யாமல், நாம் அறிந்த ஆதாம், ஏவாள் கதையுடன் தொடர்புபடுத்திப் படித்தால், வாழ்நாள் முழுவதும் மறக்காது.
(உலகைப் படைத்த கடவுள், ஆதி மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாளிடம் “நீங்கள் இந்த உலகில் எதை வேண்டுமானாலும் துய்க்கலாம். ஆனால், இந்த ஒரு ஆப்பிள் மரத்தின் பழத்தை மட்டும் உண்ணக் கூடாது” என்று ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காட்டிச் சொல்லிவிட்டாராம். ஆர்வம் தாங்காத ஏவாள், அதைப் பறித்துத் தரச் சொல்லி ஆதாமை வற்புறுத்தினாளாம். கடவுள் தடை செய்த ஆப்பிளை உண்பதால், ஏவாளுக்குத் தீமை ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று கலங்கிய ஆதாம், அந்த ஆப்பிளை முதலில், தான் உண்டுவிட்டாராம். பதறிப்போன ஏவாள், ஆப்பிள் வயிற்றுக்குள் செல்லாதவாறு, ஆதாமின் கழுத்தைப் பிடித்து இறுக்கினாராம். அந்த ஆப்பிள் துண்டு, ஆதாமின் கழுத்திலேயே தங்கி விட்டதாம்..!)
எதோடு தொடர்புபடுத்துகிறீர்கள் என்பதை விட, எப்படித் தொடர்புபடுத்தி நினைவில் பதிய வைக்கிறீர்கள் என்பதே முக்கியம். நமக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு நபரை, அவரின் சாயலில் இருக்கும் ஒரு பிரபலமான நபரை வைத்து நினைவில் கொள்வதைப் போலத்தான், இந்த முறையும்.
9) தொகுத்துக் கொள்ளுங்கள் (Organize Information)
சில மதிப்பெண்களில் சதத்தையோ, முதல் மதிப்பெண்ணையோ தவறவிடும் மாணவர்கள், பொதுவாகச் செய்யும் தவறு, கவனப் பிழை (Careless Mistake) ஆகும். இதைச் சரிசெய்ய, ஒரு சுலபமான வழிமுறைதான், தொகுத்துக்கொள்ளுதல். பேச்சாளர்கள் பலரும் கையில் குறிப்புகள் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு சிலர், இதை முதன்மையானது, இரண்டாவது... என்று வரிசைப்படுத்தித் தொகுத்து வைத்திருப்பார்கள். இப்படித் தொகுத்து வைத்திருப்பவர்கள், தங்கு தடையின்றி உரையாற்றுவது எளிதாக இருக்கும்.
அதுபோல, மாணவர்கள், தாங்கள் படிக்கும் பெரிய வினாக்களுக்கான விடைகளின், முக்கிய விவரங்களை (Points) வரிசைப்படுத்தி, ஒரு சிறிய நோட்டில் எழுதி வைத்திருந்தால், தேர்வு நாளின் காலையில், விரைவாகத் திருப்பிப் பார்த்து, நினைவு கூறுவதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு செய்திகளை முறைப்படித் தொகுத்துக்கொண்டால், நினைவுச் சங்கிலி அறுபடாமல், தொடர்ச்சியாக இருந்து, முழுமையான விடையையும், ஒரு செய்தி கூட விடுபடாமல் எழுத முடியும். இடையில் வரும் ஒரு வரியிலிருந்து பாடும்போது நினைவுக்கு வராத சில திரைப்படப் பாடல்களை, முதல் வரியிலிருந்து பாடினால், முழுமையாக நினைவுக்கு வருவது போல, இந்த தொகுத்து வைத்துக்கொள்ளும் முறையும் உதவும். பெரிய வினாக்கள் மட்டுமல்லாமல், பாடம் முழுமைக்கும் கூட இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
10) சொல்லிக் கொடுங்கள் (Teach someone else)
குறிப்பிட்ட பாடப்பகுதியினைப் படிக்கப், புரிந்துகொள்ள க~;டப்படும், உங்கள் சக மாணவர் ஒருவருக்காவது, சொல்லிக் கொடுங்கள். மற்றவர்களுக்குப் பாடம் நடத்துவதால், இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, தெரிந்த பாடப்பகுதி, மீண்டும் நினைவுகூரப்படும். அதனால், அப்பகுதி நமக்கு மேலும் வலுவாக மனதில் பதியும். இரண்டாவது, மற்றவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், முதலில் நமக்கு, அப்பகுதி முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மானம் போய்விடும். அதற்காகவாவது, அப்பகுதியை நாம் ஐயமறக் கற்போம்.
மூர்ஷிதாபாத்தின் “பாபர் அலி”, பாட்னாவின் “பாரதி” போன்ற மாணவர்கள், இதுபோல சொல்லிக்கொடுக்கத் தொடங்கித், தற்போது தம் பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், முறைசாராப் பள்ளியையே நடத்தி வருகின்றனர். அவர்களைப் போல பிறர் நலனுக்காக நாம் சேவை செய்யாவிட்டாலும், நம் சுயநலத்துக்காகவாவது, ஒரு பின்தங்கிய மாணவருக்குப், பாடம் கற்பிக்கலாமே..!