புதன், 9 மார்ச், 2016

தமிழனின் அரசியல்



செவிகள் சேர்த்ததை விட
செய்திகளில் பார்த்துத்தான்
தமிழரின் நிலை அறிந்தேன்..!
தரத்தினை உயர்த்திட
அரசியல் புகுவதென்று
என்னால் இயன்றவரை
எல்லாக் கட்சிகளும்
தன்னார்வத்துடன்
தேடித் திரிந்தேன்..!

அதிமுகவில் சேர முடியுமா..?
முதுகு வலி உள்ளதால்,
பிட்னெஸ் இல்லையாம்.
திமுகவில் தேற முடியுமா..?
தலைவர்களின் ரேஷன் கார்டில்
என் பெயர் இல்லாததால்
தகுதி இல்லையாம்.

மதிமுகவுக்கு மாற முடியுமா..?
அங்கே...
நடக்கத்தான் முடியும்.
அமர முடியாதாம்.
பாமகவுக்குள் பாய முடியுமா..?
அங்கே...
ஓடத்தான் முடியும்.
நிற்க முடியாதாம்.
தேமுதிகவுக்குத் தாவ முடியுமா..?
அங்கே...
வீசத்தான் முடியும்.
பேச முடியாதாம்.

சரி...
நானும் தமிழன் என்று
சீமானைப் படரலாமா..?
அங்கே...
இந்தியத் தமிழருக்கு
இடமே இல்லையாம்..!
காந்தியின் பேரன் என்று
மணியனைத் தொடரலாமா..?
இடப் பெயர்ச்சி எப்போதென்று
அவருக்கே தெரியாதாம்..!

கம்யூனிசத்தில் கலக்கலாமா..?
கரை சேர வழியில்லை.
காங்கிரசில் கரையலாமா..?
கறை சேர்க்க மனமில்லை.

பாஜக-வில் இணையலாமா..?
பெருக்குவதற்கு நான் தயார்.
வகுப்பதற்கு வர மாட்டேன்.
ஆம் ஆத்மி அதுவேனும்..?
கூட்டுவதில் குறையில்லை.
குழப்பத்திற்கும் குறைவில்லை.

சமக, நாமக, மூமுக, மமக
இஜக, கொமக, இன்னபிற ஏதேனும்..?
நான் யார் என்ற
அடையாளச் சிக்கலுக்குள்
அகப்படவே இயலாது.
தனிக்கட்சி... சுயேச்சை..?
“மணி”யும் இல்லை.
அணியும் இல்லை

இனி என்ன..?.
தேடிக் களைத்தபின்
வாடி இளைத்தபின்
கண்
மூடிக் கிடக்கையில்
ஞானம் பிறந்தது..!
அரசியலில்
எது என் இடம் என்ற
கலக்கம் தெளிந்தது..!

ஒழுங்காய்த் தேர்தலில்
ஓட்டுப் போடுவது..!
பிறகு..,
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது..!