நள்ளிரவு நேரம். ஒரு
இளம்பெண் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் தனியே காத்திருந்தாள். ஒரு பேருந்து
வந்ததும் ஏறினாள்.
பேருந்தின் உள்ளே
மொத்தமே ஆறேழு பேர்தான். அங்கங்கே சிதறி இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள். டிக்கெட்
கொடுக்க வந்த நடத்துநர், அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போனார்.
பேருந்து ஆள்
அரவமற்ற, இருள் கவிந்த சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு பயணி அவளை
நெருங்கினார். ஒரு சீட் இடைவெளி விட்டு அமர்ந்தார்.
அவள் முகத்தில்
எந்தப் பதற்றமும் இல்லை. மனதிலும் இல்லை என்றுதான் தோன்றியது. ஏனெனில், அவள்
செல்போனை நோண்டவில்லை. அவளிடம் செல்போன் இருந்ததாகவே தெரியவில்லை.
ஒரு ஹேன்ட் பேக்
மட்டுமே வைத்திருந்தாள்.
“ஏம்மா.., இந்த
நேரத்துல தனியா வர்ற..? இந்தக் காலத்துல பெண்கள் பாதுகாப்பா இருக்க வேண்டாமா..?”
“ஏன்.., நான் இப்ப
பாதுகாப்பாத்தானே இருக்கேன்..?” – நம்பிக்கையா, அலட்சியமா என்று புரியாத தொனியில்
கேட்டாள்.
“பாதுகாப்பா..?
பேக்-ல கத்தி, கித்தி வச்சிருக்கியா..?”
“எங்கிட்ட எந்த
ஆயுதமும் இல்ல..!”
“பெப்பர் ஸ்ப்ரே,
எமர்ஜென்சி டிவைஸ் ஏதும்..?”
“அதெல்லாம் எல்லா
நேரத்துலயும் யூஸ் ஆகாது..!”
“அப்புறம் எப்...ப...டி............?”
“அதான் உங்களைப்
போன்ற பல சகோதரர்கள் இருக்கிறார்களே..!” தீர்க்கமாகச் சொன்னாள்.
அவருக்குத் தலையிலும், மனசிலும் கணம் கூடியது போல இருந்தது.