ஞாயிறு, 19 ஜூன், 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை

சில நாட்களுக்கு முன், சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று, நிறைய நூல்கள் வாங்கினேன். நூல் பட்டியலை, முகநூலில் பதிவிட்டேன். பிறகு, ஒரு சிந்தனை.

புத்தகக் காட்சிக்குச் செல்வது, புத்தகங்களுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, வீடு / அலுவலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது... இவை எல்லாமே மற்றவரிடம் பெருமை பேசவே உதவும்.

படித்தால்தான் கற்க முடியும். பகிர்ந்தால்தான் மற்றவர்களுக்கும் பயன்படும். எனவேதான், புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில், வாசித்து உள்வாங்கி, என் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட முடிவு செய்தேன். இது முதல் நூல் பற்றிய முதல் கட்டுரை.

நூல்: முதல் முகவரி
ஆசிரியர்: வெ. நீலகண்டன்
வெளியீடு: Blackhole Media
பக்கங்கள்: 164   விலை: ரூ.140/-

குங்குமம் வார இதழின் தலைமை நிருபரான திரு.வெ. நீலகண்டன் எழுதியுள்ள, வெற்றியாளர்களின் வாழ்க்கை குறித்த நூல் இது. முகநூலில் நண்பராக உள்ள அவரின் பதிவைப் பார்த்துவிட்டுத்தான், இந்நூலை வாங்கினேன்.

எனக்கு எப்போதும் வாழ்க்கை வரலாறுகள் பிடிக்கும். அதிலும் இந்நூல், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னைக்கு வந்து வென்ற 25 சமகாலப் பிரபலங்கள் பற்றியது. சொல்லவா வேண்டும். ஆர்வத்துடன் படித்தேன்.

முதல் பாராட்டு இட ஒதுக்கீட்டுக்கு..! பல ஊர்கள், சாதிகள், துறைகளைச் சார்ந்தவர்களின் கலவை சிறப்பாக உள்ளது. ஒரு திருநங்கையின் (நர்த்தகி நட்ராஜ்) வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த பூங்கொத்து, எழுத்து மொழிக்கு. அவரவர்கள் பேசுவதாகவே வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது, வெறும் தகவல்களாக இல்லாமல் அனுபவப் பகிர்வாக இருப்பது. என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம் இது.

வடிவமைப்பும், அச்சும் நன்று. எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருந்தால், வாசிப்பு இன்னும் சுகமாக இருந்திருக்கும். 25 பேரில், ஒரு பெண் கூட இடம்பெறாதது, ஒரு வருத்தம்.

நூலில், எழுத்தாளர் அல்ல... பத்திரிக்கையாளரே வெளிப்படுகிறார். அதுவும், 25 பேரில் 13 பேர் திரைத்துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பது, மக்களின் மனத்தையும், ஊடகங்களின் குணத்தையும் பிரதிபலிக்கிறது.

இரண்டு காரணங்களுக்காக, இந்நூலைப் பரிந்துரைக்கிறேன். ஒன்று... ஏதோ காரணங்களால் பூஜ்ஜியமான நிலையில் இருந்து, தளராமல் உழைத்து,  தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தைப் படைத்தவர்களின் அனுபவங்கள் தரும் உத்வேகம்.

இரண்டு... பெரும்பாலானோர், தங்களின் வெற்றிக்குக் காரணமாகத் தங்கள் பெற்றோரின் பண்புகளையும், உழைப்பையும் நினைவு கூர்ந்து சொல்லியுள்ளது. இன்றைய இளைஞர்கள் உணர வேண்டிய பாடம் இது.

மொத்தத்தில்... இவை 25 பிரபலங்களின் அனுபவக் கதைகள் மட்டுமல்ல. தன்னம்பிக்கை விதைகள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக