உலகின் இளமையான நாடு
இந்தியா என்று போற்றிக் கொண்டே இருக்கிறோம். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கிறது என்பது மட்டுமே பெருமை ஆகாது. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்
என்பதைப் பொறுத்துதான், பெருமையா அல்லது பொறுப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இளைஞர்கள் பெரும்பாலும் சாதிக்கும் துறைகள்
இரண்டுதான். ஒன்று விளையாட்டு. மற்றொன்று சினிமா. இந்தத் துறைகளை நான் குறைத்து
மதிப்பிடவில்லை. என்றாலும், நம் நாட்டை முன்னேற்ற இந்தத் துறைகள் உதவாது. அதற்கு
முக்கியமான துறை... அரசியல்..!
அரசியலில் இளைஞர்களின் பங்கு என்ன..? இதுவரை
இருந்த நம் நாட்டு நாடாளுமன்றங்களிலேயே, இப்போது இருக்கும் அவைதான் மிக வயதான அவை.
ஆம்..! தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது – 54. இருக்கின்ற
543 மக்களவை உறுப்பினர்களில், 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை வெறும் 71 மட்டுமே.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நடந்த முதல்
இரண்டு தேர்தல்களில்தான், இளைஞர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அது
படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அதே நேரத்தில், 70 வயதுக்கும் அதிகமான ‘மூத்த குடிமக்களின்’
எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. என்ன செய்கிறோம் நாம்..?
இந்திய நாடாளுமன்றத்தின் அதே நிலைதான், நம்
தமிழகத்தின் சட்ட மன்றத்திலும். சில நாட்களில் ஆயுட்காலம் நிறைவுற இருக்கும்,
தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இளைஞர்கள்.
அதாவது, மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுள், 40 வயதிற்கும் குறைவானவர்கள், வெறும் 23 பேர் மட்டுமே. ஆனால், 60 வயதிற்கும் அதிகமானவர்களின் எண்ணிக்கையோ 31 ஆக உள்ளது.
அரசியல் அனுபவம், பின்புலம், பணம் போன்ற
காரணங்களைத் தயவு செய்து முன் வைக்காதீர்கள். ஏனென்றால், இவையெல்லாம் தேர்தலில்
வெற்றி பெறுவதற்குக் காரணமாகச் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வாய்ப்பு
அளித்தால்தானே வெற்றி பெறுவார்கள்..?
2014
மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாக
போட்டியிட்டவர்களில் 14 சதவீதமும், பிஜேபி சார்பாகப் போட்டியிட்டவர்களில் 12 சதவீதமும் மட்டுமே 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
தமிழகத்தின் நிலை, இதை விடக் கொஞ்சம்
பரவாயில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 738 வேட்பாளர்களில் 188 பேர் இளைஞர்கள். இதில், திமுக சார்பில்
போட்டியிட்டவர்களில் சுமார் 30 சதவீதமும், அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களில் சுமார் 23 சதவீதமும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆனால், மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் இளைஞர்கள் எனும்போது, வேட்பாளர்களிலும் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது இளைஞர்களாக இருக்க வேண்டாமா..? இது
பற்றி நம் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் சிந்திப்பார்களா..?
எல்லாக் கட்சிகளும், இளைஞர்களைக் குறிவைத்தே
பிரச்சாரம் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் வழியான சண்டை அதனால்தான் சூடு
பிடித்திருக்கிறது. வாக்களிக்க மட்டும் எல்லாக் கட்சிகளுக்கும் இளைஞர்கள் வேண்டும்.
ஆனால் போட்டியிட வாய்ப்பு என்று வரும்போது இளைஞர்களுக்கு இல்லையா..? போஸ்டர்
ஒட்டவும், போராடவும், கூட்டம் திரட்டவும் இளைஞர்கள் வேண்டும். பதவி கொடுக்கும்போது
அவர்களைப் பின் தள்ளுவது நியாயமா..?
இந்தியா முன்னேறுவதற்குக் கரை படியாத
அரசியலும், முறையாகச் செயலாற்றும் அதிகாரமும் வேண்டும் என்பதில் யாருக்கும்
மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி நடப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு மிச்சம்
இருக்கிறது என்றால், அது இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதில் எனக்கு ஆழ்ந்த
நம்பிக்கை உள்ளது.
முதலில், அரசியல் கட்சிகள் மனம் வைக்க
வேண்டும். அரசியல் சூழல் இளைஞர்கள் இணைவதற்கு உகந்ததாய் மாற வேண்டும். நல்ல
அரசியல் குறித்து, இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
மறியல்களும், வன்முறைகளும், சாதி
வெறுப்புகளும், சகுனித்தனங்களும், பண பலங்களும், அணி சேர்ப்புகளுமே ‘அரசியல்’ என்ற
எண்ணம் இளைஞர்களிடம் ஆழப் பதிந்துள்ளது. இதையே, என்டிடிவி-யின் ஆய்வும் எடுத்துக்
காட்டுகிறது.
இதை மாற்ற வேண்டும்..! நல்லெண்ணத்தை அவர்கள்
மனதில் ஊற்ற வேண்டும்..! அதற்காக, நம் ஒவ்வொருவரும் கடமை ஆற்ற வேண்டும்..!




சிக்ஸர்.. அருமை. ஆனா வழக்கம் மாற்றுதல் சற்று கடினமான வேலை. உதாரணம் சீனியர் வக்கீல், கைராசி டாக்டர், சீனியர் ஆடிட்டர் என்று நரை நோக்கி முறையிடுதல் ஊரிய ஒன்றே தவிர உரிய ஒன்றன்னு.
பதிலளிநீக்கு