வியாழன், 26 நவம்பர், 2015

ஒரு பக்கக் கதை: தலைப்பு - கேவலம்


அந்தப் பயணிகள் ரயில் ஊர்ந்து கொண்டிருந்தது. உட்கார இடம் இல்லாததால் எரிச்சலோடும், பரபரப்போடும் நின்று கொண்டே பயணித்துக் கொண்டிருந்தார் அவர்.
கைப்பேசி ஒலித்தது. அழைப்பை ஏற்றுப் பேசினார். "எத்தனை தடவை சொல்றது..? சொன்ன அமௌன்ட்க்கு ஒரு ரூபாய் கூடக் குறையக் கூடாது. நான் என்ன வியாபாரமா பண்றேன்... நீங்க பேரம் பேசுறதுக்கு..? நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர்ங்கறதை ஞாபகத்துல வச்சுக்கங்க. இதுல பல பேருக்குப் பங்கு கொடுக்கணும். உங்க காரியம் முடியணும்னா நீங்க கொடுத்துத்தான் ஆகணும்..!"
கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தார். அந்த நேரம் ஒரு கைத்தட்டும் ஒலி முன்னே வந்தது. ஒரு திருநங்கை பின்னே வந்தார்.
"அய்யா.. அரவாணிக்கு தர்மம்..!" கை நீட்டினார். "கை காலு நல்லாத்தானே இருக்கு. அவனவன் நிக்க முடியாம வேதனையோட ஆபீஸ் போகறான். இதுல உங்க தொல்லை வேற..!"
எரிந்து விழுந்த அந்தப் 'பெரியவரை' இரக்கத்துடன் பார்த்தார் திருநங்கை. சிறிது தூரம் நடந்து சென்று, ஒரு இருக்கையில் உட்கார்ந்து இருந்த இளைஞர்களைக் கொஞ்சம் நகரச் சொல்லிவிட்டு, "சார், இந்த இடத்துல உட்காருங்க" என்று அழைத்தார்.
இருக்கை கிடைத்த மகிழ்ச்சியில், வேகமாய்ப் பத்து ரூபாய் ஒன்றை எடுத்து, திருநங்கையிடம் நீட்டினார்.
"வேணாங்க..! நான் கேட்டதுமே நீங்க கொடுத்து இருந்தா அது தர்மம். இப்பக் கொடுத்தா, அது லஞ்சம். ஏற்கனவே, வேற வழி தெரியாமத்தான், பிச்சை எடுக்கிறேன். அதுக்கும் மேல, இந்த லஞ்சம் வாங்குற கேவலத்தையும் செய்ய என்னைப் பழக்கிடாதீங்க..!"
மானஸ்தன் தலை குனிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக